பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் பிரஜைகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பிரெஞ்சு அரசாங்கம் அறிவுத்தியுள்ளது.
பிரெஞ்ச் எதிர்ப்புப் போராட்டங்கள் பாகிஸ்தானில் தீவிரமடைந்து வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரிக்கும் கார்ட்டூன்களை பிரெஞ்சு பத்திரிகை ஒன்று வெளியிட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் அது பத்திரிகையின் உரிமை என பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்தது. அந்தப் பத்திரிகைக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் அரசாங்கம் ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு எதிர்ப்பு போராட்டங்கள் பாகிஸ்தானில் பல மாதங்களாக நடந்து வருகிறது.
பிரெஞ்சு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த வாரம் நாட்டின் பெரும் பகுதிகளில் வன்முறை ஏற்பட்டதால் அனைத்து பிரெஞ்சு நாட்டினரும் நிறுவனங்களும் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானில் உள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவுறுத்தியது.
இவர்கள் தற்போதுள்ள வணிக விமான நிறுவனங்கள் மூலமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறலாம் என்றும் தூதரகம் தெரிவித்தது.
இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள பிரெஞ்சு தூதரை வெளியேற்ற வேண்டும் என அழைப்பு விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தெஹ்ரீக்-இ-லாபாய்க் என்ற இஸ்லாமிய அமைப்பு தலைவரான சாத் ரிஸ்வி நேற்று கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இவர் நேற்று அனைத்து நகரங்களிலும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல்களில் இரண்டு போலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இப்போராட்டத்தை அடக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை பிரயோகித்து பொலிஸார் தாக்குதல் நடத்தினர்.
நபியின் கௌரவத்தைப் பாதுகாக்கும் உணர்வுகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஆனால் இதுபோன்ற போராட்டங்கள் பாகிஸ்தானை உலகளவில் ஒரு தீவிரவாத தேசமாக சித்தரித்திருக்கக்கூடும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.